30.3.11

சாளரம் திறக்கையில்..


சாளரம் திறக்கிறாய், முதன்முதலாய்
ஒளியைச் சந்திக்கின்றன என் விழிகள்...

“நிலா நிலா ஓடி வா”வும்
“சின்ட்ரெல்லா”வும்
ரசிக்கிறேன் விழிவிரித்து...
விரிக்கிறாய் விழி நீயும் என்னோடு..

அம்புலிமாமாவும் கோகுலமும்
எழுதுக்கூட்டுகிறேன்...
படிக்கிறாய் பக்கமொன்றைப்
பலமணிநேரம் பக்கத்தில் படுத்தபடி..

குறுந்தகடுகளின் கூட்டம் சேர்த்து
வரிபிழறாமல் ரஹ்மானைப் பழகுகிறேன்
ராகம் தவறாமல்...
ரசனை கூட்டுகிறாய் நீயும்.

என் மருதாணிக் கிறுக்கல்
பழக கை தேடி உன் கரம் கேட்கிறேன்..
உள்ள பணியனைத்தும்விட்டு
கைநீட்டி சிரிக்கிறாய்...

சிட்னி செல்டனுக்கும் சுஜாதாவுக்கும்
மாறி புதிதாய்ப் பல
கற்றதாய் நினைக்கையிலும் தோழி
நீ ரசிக்கிறாய் என்னையும்..

“அம்மாவுக்கு எதுவுமே தெரியாது” மாறி
“அம்மாவுக்கு எல்லாம் தெரியுமென எனக்குத் தெரியாது”
உணர்கிறேன் இன்று,
கேள்வி எழுப்பி வெட்கச் செய்கிறது மனசாட்சி..
“அம்மாவின் உண்மையான ரசனை என்ன?”

விடையில்லா மௌனத்துடன் ரசிக்கத் தொடங்குகிறேன்
“நிலா நிலா ஓடி வா”
நான் ஒரு புது சாளரம் திறந்து..

24 comments:

நிரூபன் said...

சாளரம் திறக்கிறாய், முதன்முதலாய்
ஒளியைச் சந்திக்கின்றன என் விழிகள்...//

பார்வையில் இவ்வளவு பரிமாணங்கள் இருக்கின்றன என்பதனைக் கவிதையில் பளிச்செனச் சொல்லுகிறீர்கள்.

நிரூபன் said...

அம்புலிமாமாவும் கோகுலமும்
எழுதுக்கூட்டுகிறேன்...
படிக்கிறாய் பக்கமொன்றைப்
பலமணிநேரம் பக்கத்தில் படுத்தபடி..//

வளர்ந்து வரும் காதலின் வகையறாக்களைப் பாடுவது போல உள்ளது.

நிரூபன் said...

என் மருதாணிக் கிறுக்கல்
பழக கை தேடி உன் கரம் கேட்கிறேன்..
உள்ள பணியனைத்தும்விட்டு
கைநீட்டி சிரிக்கிறாய்...//

இதனைத் தான் காதலில் இசைய வைத்தலும், இசைந்து கொடுத்தலும் என்று கூறுவார்களோ!
ரசித்தேன்..

கயல்விழி said...

நன்றி நிரூபன் :)

நிரூபன் said...

சிட்னி செல்டனுக்கும் சுஜாதாவுக்கும்
மாறி புதிதாய்ப் பல
கற்றதாய் நினைக்கையிலும் தோழி
நீ ரசிக்கிறாய் என்னையும்..//

காதலுக்காய் எழுதப்பட்ட கவிதை என நினைத்துப் படித்து வருகையில், மேற் கூறப்பட்ட வரிகளூடாக கவிதையின் போக்கினை மாற்றியுள்ளீர்கள்.
நட்பின் மகத்துவத்தையும், காதலினையும் இணைத்துச் சொல்லுகிறது கவிதை.

கயல்விழி said...

எத்தனைபேர் வழியில் வந்தாலும் முதல் காதல் தாய் தானே! :)

நிரூபன் said...

வணக்கம் சகோதரி, சாளரம் திறக்கையில் ஒரு மனிதனின், மங்கையின் உணர்வுகளை சிறு வயது முதலே அழகழாக நட்பின் சாயல் கொண்டு, காதல் எனும் மொழி கலந்து வார்த்தைகளின் கோர்வைகளால் வெளிப்படுத்தி நிற்கிறது.

உங்கள் கவி மொழி நடை தனிச் சிறப்பு.

நிரூபன் said...

கயல்விழி said...
எத்தனைபேர் வழியில் வந்தாலும் முதல் காதல் தாய் தானே! :)//

அன்னையின் அன்பான காதலை நட்பாக்கி கவிதையில் கவியாக்கி, முதல் காதலின் அர்த்தத்தை தாய் வடிவில் தந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் சகோதரம்.

கயல்விழி said...

நன்றி சகோதரரே! :)

கயல்விழி said...

நட்பு, காதல், ரசனை, இலக்கியம் என்று அனைத்தையும் எனக்கு முதல் ஸ்பரிசம் முதல் அளித்துவரும் என் முதல் ரசிகை, என் அம்மாவிற்கு இந்த வரிகளையும் அதிலுள்ள என் அன்பையும் உரித்தாக்குகிறேன்..

நிரூபன் said...

நன்றிகள் சகோதரி, நேரமிருந்தால் என் வலையினையும் பாருங்கோ உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?
http://tamilnattu.blogspot.com/

நிரூபன் said...

வணக்கம் சகோதரி, உங்கள் படைப்புக்களைத் தமிழிஷ், தமிழ்மணம் முதலியவற்றில் இணைப்பதன் மூலம் இன்னும் அதிகமான வாசகர்களிடன் உங்களின் படைப்புக்களைக் கொண்டு செல்ல முடியும்.

http://tamilmanam.net/user_blog_submission.php

http://www.tamilmanam.net/tamilmanam/toolbar/blogger.html

நிரூபன் said...

http://ta.indli.com/static/add-indli-voting-widget-blogger-tamil
இது தமிழிஸ் தளத்தில் உங்கள் பதிவுகளை இணைத்துக் கொள்ள உதவும் லிங்.

MANO நாஞ்சில் மனோ said...

//அம்மாவுக்கு எதுவுமே தெரியாது” மாறி
“அம்மாவுக்கு எல்லாம் தெரியுமென எனக்குத் தெரியாது”
உணர்கிறேன் இன்று,
கேள்வி எழுப்பி வெட்கச் செய்கிறது மனசாட்சி..
“அம்மாவின் உண்மையான ரசனை என்ன?”//

அருமை அருமை....

Ram said...

//சாளரம் திறக்கிறாய், முதன்முதலாய்
ஒளியைச் சந்திக்கின்றன என் விழிகள்..//

பிறப்பு.. இங்கே சாளரம் திறப்பது என்பது குழந்தை பிறப்பதை உணர்த்துகிறது..

அருமையான உவமை..

Ram said...

//“நிலா நிலா ஓடி வா”வும்
“சின்ட்ரெல்லா”வும்
ரசிக்கிறேன் விழிவிரித்து...
விரிக்கிறாய் விழி நீயும் என்னோடு..//

ஆம்.. அம்மா அம்மா தான்.. சிறுகுழந்தைகளோடு குழந்தைகளாக.. அம்மா மட்டும் தான்..

Ram said...

//அம்புலிமாமாவும் கோகுலமும்
எழுதுக்கூட்டுகிறேன்...
படிக்கிறாய் பக்கமொன்றைப்
பலமணிநேரம் பக்கத்தில் படுத்தபடி..//

இந்த வரிகள் தான் உண்மையில் எனக்கு இது தாயை பற்றிய கவிதை என புலபடுத்தியது.!! ஏன்னா எங்க அம்மாவும் இத பண்ணியிருக்காங்களே.!

Ram said...

//“அம்மாவின் உண்மையான ரசனை என்ன?”//

அட எல்லாருமே இப்படி தாங்க நினச்சிருப்போம்.. இதுல வெட்கபடலாம் ஒண்ணுமில்ல.. நம்மள ரசிக்கிறதுக்காக, நம்ம பேச்ச கேக்குறதுக்காக தனக்கு தெரிஞ்சதையும் தெரியாதுன்னு சொல்லி கேட்டுட்டு அதை தெரியும்னு கடைசி வரைக்கும் சொல்லமாட்டாங்க.. பின்னாடி நமக்கே தெரியும்போது இப்படி வெட்கம் வரும்.. அதுக்கப்பறம் இதெல்லாம் சரியாயிடும்.. அம்மா ரசனை நாமதான்..

Ram said...

//“நிலா நிலா ஓடி வா”
நான் ஒரு புது சாளரம் திறந்து.//

அட நம்ம கயலுக்கு கல்யாணம் நடந்திடுச்சா.? சொல்லவேயில்ல.?

கயல்விழி said...

@தம்பி கூர்மதியன் அண்ணா..
//பிறப்பு.. இங்கே சாளரம் திறப்பது என்பது குழந்தை பிறப்பதை உணர்த்துகிறது..//
ஆமாம் அண்ணா.. ரொம்ப ரசிச்சு எழுதிய உவமை..

//அம்மா ரசனை நாமதான்//
அம்மா இந்த கவிதைய படிச்சிட்டு இதையே தான் சொன்னாங்க..

//அட நம்ம கயலுக்கு கல்யாணம் நடந்திடுச்சா.? சொல்லவேயில்ல.//
அட அது எப்படி அண்ணா? நீங்க வாழ்த்தாமலா?
கண்டிப்பா உங்களுக்கெல்லாம் அழைப்பு உண்டு இன்னும் 5 வருடங்கள் ல..

கயல்விழி said...

MANO நாஞ்சில் மனோ அண்ணா.. நன்றி :)

கீதமஞ்சரி said...

அம்மாவைத் தோழியாகப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். மகளைத் தோழியாகப் பெற்றவர்கள் அதிபாக்கியசாலிகள். நான் அதிபாக்கியசாலி. உங்கள் கவிதையின் ஆழத்தை என்னால் உணரமுடிகிறது. பாராட்டுகிறேன் கயல்விழி.

கயல்விழி said...

@கீதா .. நன்றி அம்மா.. பாக்கியசாலிகளை உருவாக்குபவர்கள் தான் அதிபாக்கியசாலிகள் ஆகா முடியும் என்பது என் கருத்து.. :)

அருண் said...

விடையில்லா மௌனத்தின் விடை:

ஒரு தாயின் ரசனை மகவன்றி வேறுண்டோ????

Post a Comment