உன் கிறுக்கல்கள் கூட
கவிதையாகின்றன எனக்கு...
உன் புள்ளிகள் கூட
கோலமாகின்றன எனக்கு..
உன் கை பட்டு கசங்கிய காகிதம்
நட்சத்திரமாய் எனக்கு..
உன் கையாலிட்ட அன்னம்
பிரசாதமாகிறது எனக்கு..
விசித்திரமான நோய் தான்..
நாடியில் ஏதும் பிழையில்லை..
நீ என்னை நாடி வந்தால் என்ன பிழையா??
கண்ணாடியில் முகம் பார்க்கையில்..
என் பெயர் சொல்லி எவரோ அழைக்கையில்..
என் கொலுசுச் சத்தம் மௌனம் விலக்குகையில்..
அழைப்புமணி என் கற்பனை கலைக்கையில்..
தன்னிச்சையாய் மனம் தேடுகிறது
உன்னை!!!
வார்த்தைகளின் வேலைநிறுத்தம்,
கற்பனையின் கடுங்கோபம்!!
மனதினுள் என்ன கோரிக்கை?
பேனா தலை குனிய தடுப்பேதோ உளது!
தமிழ்த்தாயே! மகளின் மேல்
சினமேன்றால் உணவளிக்க மறுப்பது முறையோ?
மையிலோ மையலிலோ தடையில்லை..
மனமுடைய நியாயமே இல்லை..
இல்லாத ஒன்றைத் தேடுவது போல்
ஓர் உணர்வு..
தேடுகிறேன் கவிக்குள் கவியை..
விமர்சனங்களைக் கேட்டு
விரக்தி அடையாதே!
கரித்துண்டில் யாரும்
தோஷம் பார்ப்பதில்லை..
பித்தளையை யாரும்
உரசிப் பார்ப்பதில்லை..
கூழாங்கற்களை யாரும்
பட்டை தீட்டுவதில்லை..
உன் கண்களைப் பார்த்ததில்
ஓவியங்கள் வெறுத்தேன்..
உன் வார்த்தைகள் கேட்டதில்
கவிதைகள் வெறுத்தேன்..
உன் குரலைக் கேட்டதில்
இசையை வெறுத்தேன்..
நீ இல்லா நேரங்களில்
என்னையே வெறுத்தேன்...
என்றாவது அடிக்கிறது சாரல்
என் ஜன்னலில்..
என்றாவது நுழைகிறது வெயில்
என் வாசலில்..
என்றாவது தவழ்கிறது தென்றல்
என் சுற்றிடத்தில்..
நீ இருக்கிறாய் அன்று என்னோடு..
அன்று தெரிகிறது
உன் பிரிவு என்னிடம் என்னென்ன பறித்ததென்று!!!!!!!!!!!!!