புழுவாய்க் கூட்டிலடைந்து
கிடந்து பல்லாயிரம்
போராட்டம் நடத்திப்பின்
வெளிவந்தோம்!
ஆரம்பத்தில் கல்லடி, மரத்துப்போனது!
பலநூறாண்டாய்த் தொடர்கிறது சொல்லடி..
ரணங்கள் ஆறுவதே இல்லை..
இன்று நம் சமூகத்தில்
அந்தப்புரம் பல கொண்டவனெல்லாம்
உத்தமன் என்ற போர்வைக்குள்..
தனிமையில் வாழ்வாளாயின்
கண்ணகிக்கும் கிடைக்கும்
“கேடுகேட்டவள்” பட்டம்!
பாரதி!! இப்பட்டம் ஆளவா பாரினில் பெண்கள்??
வெற்றியில் மாலைகள் சூடவேண்டிய
தோள்களுக்கு அநேக நேரங்களில்
புதுச் சிலுவைகள்!
சாதிக்கும் சாதியின்மேல்
சகதியடிப்பது புதிதல்ல..
அடிக்கப்பட்டது , எங்கள்
வளர்ப்பின் மேல்,
படிப்பின் மேல்,
கலையின் மேல்,
நம்பகத்தின் மேல்..
தண்ணீர்பட்ட தாமரை இலையாய் இருந்தோம்!
தொடர்கிறது, எங்கள்
நடத்தையின் மேல்,
கொண்ட காதலின் மேல்,
கற்பின் மேல்..
மனபாரத்தால் மூழ்கடிக்கப்படுகிறோம்!
எங்களையும்
எங்கள் மனதையும் கல்லாக்கிக்கொண்டு
வாழும் ‘கலியுக அகலிகைகள்’ !!!