23.2.11

நான் மரம்...

முறையிடுகிறேன் தமிழே!
பெஞ்சுகளை நம்பப் பெட்டிகள்
இல்லை என்னிடம்!!
நின் நடுவுநிலைமையை நம்பி நான்..

உன் புதல்வர்கள்
ஏசுகிறார்கள் மரம போல்
நிற்கிறாயே என்று! சொல்கிறார்கள்
உணர்சியற்றவனை மரம் என்று!

ஏனப்படி??

என் நிழலை என்றாவது
நான் வாடகைக்கு விட்டிருக்கிறேனா?

என் இலையின் பச்சையைத் தவிர
பச்சையாய்ப் பேசியிருப்பேனா?

உயிர் வாழத் தண்ணீர் எங்களுக்கும் தேவை..
ஆனால் பக்கத்து மரங்களோடு சண்டையிட்டு
வேர்கள் உடைத்துக்கொண்டிருக்கிறோமா??

உயிர்வளி உற்பத்திக்கு உள்ளபடியே
கையூட்டு கேட்டிருக்கிறேனா?

அரசமரம் நான், பிள்ளையாருக்குத் தான்
மத கோவிலில் வளரமாட்டேன் என்று
பிடிவாதம் பிடித்திருக்கிறேனா?

என் மலரைச் சூடக்கூடாது என்று
கைம்பெண்களை ஒதுக்கினேனா??

இவை தாம் உணர்ச்சி என்றால்..
"மரத்துப்போனவர்கள்" தான் நாங்கள்!

மனித உணர்ச்சியின் உறைவிடமாய்
ஓலைச்சுவடிகளாய், தாள்களாய், பலகைகளாய்
நாங்கள்!
உணர்ச்சியின் உச்சத்தில் தீப்பந்தமும் நாங்கள்!

உணர்சியற்றுப் போய் இருக்கிறோமா?
சொல் தமிழே!
நாங்கள் திட்டிக்கொள்கிறோம்
'மனிதன் போல் இருக்கிறாயே' என்று!!


No comments:

Post a Comment